நாகர்கோவில், ஜூலை 13 –
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 490 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 16 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக்கொண்டார். நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை, உதவி ஆட்சியர் பயிற்சி மோனிகா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தினேஷ் சந்திரன், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



