நாகர்கோவில், மே 18 –
நாகர்கோவில் அடுத்த கோவில்விளை பகுதியில் ரேஷன் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். அங்கிருந்த மூடைகளை சோதனை செய்தபோது அவைகள் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் அரிசி மற்றும் கோதுமை மூடைகள் என்பது தெரிய வந்தது. இவை எந்த கடைகளில் இருந்து சப்ளை ஆனது என்பது தெரியவில்லை.
இதையடுத்து அந்த மூடைகளை போலீசார் கைப்பற்றி நாகர்கோவில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையத்திற்கு லாரிகளில் கொண்டு வந்தனர். கைப்பற்றப்பட்ட உணவு பொருள்களின் மூடைகளில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தின் சீல் உள்ளது. அதில் உள்ள பதிவு எண்கள் மூலம் எந்தெந்த ரேஷன் கடைகளுக்கு இவைகள் அனுப்பப்பட்டது என்பது தொடர்பான விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர். கைப்பற்றப்பட்ட உணவு பொருட்களின் அளவு சுமார் 5 டன் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
இவற்றை மாவு மில் ஒன்றுக்கு அனுப்பி வைத்து, அவற்றை அரைத்து பாக்கெட்டுகளாக விற்பனை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதில் தொடர்புடையவர்கள் யார்? என்ற விவரமும் தெரியவில்லை. ரேஷன் கடைகளுக்கான சீல் வைக்கப்பட்ட நிலையில் மூடைகள் உள்ளதால் இவை ரேஷன் கடை ஊழியர்களின் உதவியுடன் தான் கடத்தப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் கூறுகையில், பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இவற்றை பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறோம். இதில் தொடர்புடையவர்கள் யார்? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின் முழு விவரத்தையும் வெளியிடப்படும் என்று கூறினார்கள்.
குமரியில் மொத்தமாக ரேஷன் கடைகளில் இருந்து நேரடியாக பொருட்கள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து போலிஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


