நாகர்கோவில், மே 6 –
நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியை சேர்ந்தவர் அகஸ்திலிங்கம் பிள்ளை (33). பெயிண்டிங் தொழிலாளி. இவரது மனைவி அலெக்ஸ் மேரியின் உறவினர் மகளை பீச் ரோடு பகுதியை சேர்ந்த பசுபதி (32) என்பவர் காதலித்து திருமணம் செய்துள்ளார்.
அடிக்கடி இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதை அகஸ்திலிங்க பிள்ளை கண்டித்து சமாதானம் செய்து வந்தார். ஆனாலும் தகராறு நீடித்தது. இதனால் பசுபதியும் மனைவியும் பிரிந்தனர். தனது மனைவி பிரிந்து சென்றதற்கு அகஸ்திலிங்க பிள்ளை தான் காரணம் என பசுபதி நினைத்தார். இதனால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்தார்.
சம்பவ தினம் அகஸ்தலிங்கம் பிள்ளை பீச் ரோடு பகுதியில் செல்லும் போது, பசுபதி அங்கு வந்து அவரை தடுத்து நிறுத்தி தகராறு செய்து கத்தியால் குத்தினார். தொடர்ந்து அவர் கொலை செய்வதாக மிரட்டி விட்டு பசுபதி தப்பினார். படுகாயம் அடைந்த அகஸ்திலிங்க பிள்ளை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் பசுபதி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பசுபதி மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது. அவர் போலீஸ் நிலைய குற்ற சரித்திர பதிவேடு பட்டியலிலும் உள்ளார்.


