நாகர்கோவில், ஏப். 27-
நாகர்கோவில், வடசேரி பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (50). ஆட்டோ டிரைவர். இவருக்கும் தற்போது புத்தேரி, குறிஞ்சி நகர் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கும் பழக்கம் இருந்து வருவதாக தெரிகிறது. இந்தப் பெண்ணுக்கு திருமணம் ஆகி 19 வயதில் மகன் ஒருவர் உள்ளார். மகன் நாகர்கோவிலில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 24ஆம் தேதி இரவு அர்ஜுனன் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிலிருந்து அவர் வெளியே வரும் போது அந்த பெண்ணின் மகன் எதிர்பாராத விதமாக வந்துள்ளார். அர்ஜுனனை பார்த்ததும் எங்கள் வீட்டிற்கு ஏன் அடிக்கடி வருகிறாய்? என கேட்டு கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அர்ஜுனன் வெட்டுக்கத்தியால் நர்சிங் மாணவனை வெட்டினார். இதில் மாணவர் படுகாயமடைந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் மாணவரை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் அர்ஜுனன் மீது வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


