நாகர்கோவில், மார்ச் 17 –
தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் கடத்தல், போதை புழக்கத்தால் இளைஞர்கள் இளம்பெண்கள் வாழ்க்கை சீரழிவு, இதனை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது. தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள், கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் பொதுமக்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் பேசுகையில்: தமிழகம் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பாக இல்லதா சூழலை இந்த திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு பதிலாக போதை பழக்கங்களுக்கு போதை விற்பனையை ஊக்குவித்துள்ளது. இதனால் தமிழகம் சீரழிவை சந்தித்தது. இதனை மாற்ற வருகின்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று எடப்பாடியார் மீண்டும் ஆட்சி அமைப்பார் என தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் குமரி மேற்கு மாவட்ட அதிமுக கழக செயலாளர் ஜெயசதர்சன், முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளருமான கே.டி.பச்சைமால், முன்னாள் எம்பி நாஞ்சில் வின்சென்ட், பாஜக மாவட்ட தலைவர் கோபகுமார் மற்றும் அமமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.



