நாகர்கோவில், ஜூலை 23 –
குமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சார்பில் நாகர்கோவில், வேப்பமூடு சந்திப்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒருவருக்கு 7 கிலோ அரிசி என்கிற புதிய தேசிய உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும், அந்தியோதயா அன்னை யோஜனா திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் உள்ள அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் மாதம் 35 கிலோ அரிசி வழங்கப்படுவது உறுதி செய்ய வேண்டும், ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏஏஒய் குடும்ப அட்டை மூலம் மாதம் 35 கிலோ அரிசி வழங்க வேண்டும், மாற்று திறனாளிகளுக்கு வீடு தேடி உணவு வழங்கும் திட்டத்தை நாடு முழுவதும் அமல் படுத்த வேண்டும், ஆர்.பி.டபிள்யூ.டி சட்டம் 2016 ன் படி மாற்றுத்திறனாளிகள் கண்ணியமான வாழ்க்கை, உணவு உரிமை அரசு உறுதி செய்ய வேண்டும், கூடுதல் உறுப்பினர்களைக் கொண்ட மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு தேவைக்கேற்ப கூடுதல் உணவு தானியங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு நாகர்கோவில் மாநகராட்சி நியமன உறுப்பினரும், மாவட்ட இணைச் செயலாளருமான அருள் தலைமை தாங்கினார். மாநகர செயலா mர் வெற்றிவேல் அருள் குமரேசன், குழித்துறை நகராட்சி உறுப்பினர் ரவி, மிக்கேல் நாயகி, தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் வில்சன், மாவட்ட குழ உறுப்பினர் சார்லஸ், சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



