நாகர்கோவில், ஜூலை 31 –
ஆரல்வாய்மொழி அருகே தோவாளை மெயின் ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை மாணவ மாணவிகள் வழக்கம் போல் பள்ளிக்கு வந்தனர்.
இதை அடுத்து 6 ம் வகுப்பு வகுப்பறைக்கு வந்த ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு வழங்குவதற்காக சத்து மாத்திரைகளை கொண்டு வந்திருந்தார். பின்னர் அவர் தனித்தனியாக மாணவ மாணவிகளுக்கு சத்து மாத்திரை வழங்காமல் மேஜையில் மொத்தமாக வைத்துள்ளார். இதை அடுத்து மாணவ மாணவியரிடம் சத்து மாத்திரைகளை எடுத்து சாப்பிடுமாறு கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்.
அதை தொடர்ந்து வகுப்பிலிருந்த ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் மேஜையில் வைக்கப்பட்டிருந்த சத்து மாத்திரையில் ஒன்றுக்கு மேற்பட்ட மாத்திரைகளை எடுத்து தின்றதாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த மாணவி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் வெளியில் சென்ற ஆசிரியரை வகுப்பறைக்கு அழைத்து வந்தனர்.
இது குறித்து மாணவியன் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகள் மயங்கி விழுந்ததை அறிந்த பெற்றோர் அலறி அடித்துக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு சென்றனர். பின்னர் மகளை மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர். மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பள்ளிக்கூடத்தில் 6ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்த சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட ஆசிரியரை விசாரிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.


