தேனி, ஏப். 30 –
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில், தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் இன்று (30.04.2026) நடைபெற்றது.
23.04.2026 அன்று ஒரே கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவை தொடர்ந்து, தேனி மாவட்டத்தின் 198. ஆண்டிபட்டி, 199. பெரியகுளம், 200. போடிநாயக்கனூர் மற்றும் 201. கம்பம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, கொடுவிலார்பட்டியில் அமைந்துள்ள தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரியில் 04.05.2026 அன்று நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணும் மேஜையில் ஒவ்வொன்றிலும் ஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர் மற்றும் ஒரு நுண்பார்வையாளர் பணியாற்ற உள்ளனர். தபால் வாக்குச்சீட்டுகள் காலை 8.00 மணிக்கு எண்ணத் தொடங்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் நாளன்று வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, பின்னர் எண்ணும் மேஜைகளுக்கு கொண்டு செல்லப்படும். வாக்கு எண்ணும் அலுவலர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட மேஜையிலேயே இருந்து பணியாற்ற வேண்டும் என்றும், ஒவ்வொரு சுற்று வாக்குகளும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு தெளிவாக காண்பிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மின்னணு வாக்கு எண்ணிக்கைக்கு 204 பேர் (68 மேற்பார்வையாளர்கள், 68 உதவியாளர்கள், 68 நுண்பார்வையாளர்கள்) மற்றும் தபால் வாக்கு எண்ணிக்கைக்கு 96 பேர் (24 மேற்பார்வையாளர்கள், 48 உதவியாளர்கள், 24 நுண்பார்வையாளர்கள்) என மொத்தம் 300 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கையின் போது ஏதேனும் ஐயம் ஏற்பட்டால் உடனடியாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி நேர்மையாகவும் நியாயமாகவும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். இப்பயிற்சி வகுப்பில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



