புதுக்கடை, ஜூன் 12 –
கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதி மீனவர்களின் மீன் பிடி படகுகளுக்கு அரசு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கி வருகிறது. இந்த மண்ணெண்ணெயை கடத்தல் பேர்வழிகள் அதிக விலைக்கு கேரளாவுக்கு கடத்தி செல்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடத்தல் மண்ணெண்ணெயை போலீசார் மற்றும் தனி அதிகரிகள் மூலம் பிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று இரவு 9.30 மணியளவில் மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் கெ.எம் பாரதி தலைமையில், துணை வட்டாட்சியர் முத்துப் பாண்டி, ஓட்டுனர் ஜாண் பிரைட் உள்ளிட்ட பறக்கும் படை குழுவினர் கிள்ளியூர் வட்டார பகுதிகளில் பொது வினியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் இருந்தனர்.
அப்போது தேங்காப்பட்டணம் என்ற இடத்தில் சந்தேகத்திற்கு வந்து கொண்டு இருந்த கேரளா பதிவெண் கொண்ட 2 சொகுசு கார்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சொகுசு கார்களில் உள்ள டிரைவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். இதில் ஒரு கடத்தல் வாகனத்தில் 1200 லிட்டர் மீனவர்களுக்கு மானியவிலையில் அரசால் வழங்கப்படும் வெள்ளை நிற மண்ணெண்ணெயும் கண்டுபிடிக்கப்பட்டது.
மற்றொரு கடத்தல் காரில் 600 லிட்டர் மீனவர்களுக்கு மானிய விலையில் அரசால் வழங்கப்படும் வெள்ளை நிற மண்ணெண்ணெய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இவற்றை கேரளாவுக்கு கடத்தி செல்ல இருந்தது தெரிய வந்தது. இரண்டு சொகுசு கார்களில் இருந்தும் மொத்தம் 1800 லிட்டர் மீனவர்களுக்கு மானியவிலையில் அரசால் வழங்கப்படும் வெள்ளை நிற மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்ற பட்ட மண்ணெண்ணெயை தூத்தூர் சின்ன துறை மீனவர் கூட்டுறவு சங்க கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. வாகனம் கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.



