சங்கரன்கோவில், ஆகஸ்ட் 16 –
தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, யூஎஸ்டி சீனிவாசன், பரமகுரு, மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் செண்பக விநாயகம் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.
தொடர்ந்து இந்த கூட்டத்தில் சுதந்திரமான நேர்மையான தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள வாக்குத்திருட்டு மற்றும் பாஜகவின் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தும், திமுகவின் கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் ஏற்று நியாயமான முறையில் தேர்தலை நடத்திட வேண்டும் எனவும், கழகத் தலைவர் முதல்வர் உத்தரவின்படி ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொண்டு சென்று உறுப்பினர் சேர்க்கையில் தென்காசி வடக்கு மாவட்டத்தில் வெற்றிவாகை சூடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சரவணன், நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கரபாண்டியன், பெரியதுரை மற்றும் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



