தஞ்சாவூர், செப் 10:
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரேவதி ஆய்வு செய்தார். கண்டியூர் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறையை பார்வையிட்டதுடன், கண்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேஷன் கடையில் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் விநியோகம் குறித்து ஆய்வு செய்தார். விற்பனை முனையக் கருவி மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதையும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து கண்டியூர் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் பாலின வளமையம் மற்றும் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்ட ஆட்சியர், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் கல்வி குறித்து ஆய்வு செய்தார். பின்னர் கல்யாணபுரம் 1-ம் சேத்தி ரேஷன் கடையில் பொருட்களின் எடை, இருப்பு உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்தார்.
திருவையாறு அரசர் கல்லூரி வளாகத்தில் சத்திர நிர்வாகத்தின் கீழ் ரூ.19.52 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் ‘கல்யாண மஹால்’ பாரம்பரிய கட்டிட பாதுகாப்பு, புதுப்பித்தல் மற்றும் சீரமைப்பு பணிகளையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும் திங்களூர் சந்திரன் கோவிலில் ரூ.4.19 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளையும் பார்வையிட்டார்.
ஆய்வின்போது திருவையாறு வட்டாட்சியர் பிரேம்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன், உதவி பொறியாளர் ரவீந்திரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி, மாவட்ட சுற்றுலா அலுவலர் வரதராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



