கோவை, ஆக. 24:
தமிழக அரசின் ‘போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை முன்னிறுத்தியும், கோவை மாநகரை ‘போதையில்லா கோவை’ என்ற நிலையை உருவாக்கும் நோக்கிலும், கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கோவை மாநகர தெற்கு காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின்படியும், போத்தனூர் மற்றும் குனியமுத்தூர் சரக உதவி ஆணையர்களின் வழிகாட்டுதலின்படியும் இந்த சோதனை நடைபெற்றது.
இதன்படி, D3 போத்தனூர், D4 குனியமுத்தூர் மற்றும் D2 செல்வபுரம் காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலான போலீசார், தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள வீடுகள், அறைகள் மற்றும் ஆண்கள் விடுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
குறிப்பாக போத்தனூர், குனியமுத்தூர், செல்வபுரம், BK புதூர் மற்றும் பாலு கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு காவல் குழுக்களாகப் பிரிந்து ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும், போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டில் ஈடுபடக்கூடிய நபர்களின் நடவடிக்கைகள் குறித்தும், மாணவர்கள் தங்கியுள்ள பகுதிகளில் போதைப்பொருட்கள் புழக்கத்தில் உள்ளதா என்பது குறித்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.
ஓணம் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த திடீர் சோதனை நடவடிக்கை, போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தில் ஈடுபடுவோருக்கு காவல்துறையின் தொடர் கண்காணிப்பு மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் குறித்த எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே காவல்துறை மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாத்து, அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, போதைப்பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் பயன்பாட்டுக்கு எதிரான தொடர் சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



