திருவெண்ணெய்நல்லூர், அக். 10 –
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் அக்டோபர் 11 சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் தலைமை தாங்கினார். திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் அழகிரி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசகர் முருகன் கலந்துகொண்டு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது பேசிய அவர், பெண் குழந்தைகளுக்கும் பாலியல் ரீதியாக ஏற்படும் குற்ற நடவடிக்கைகளை தடுப்பது, படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகள் மீண்டும் படிப்பை தொடர்வது, குழந்தை திருமணம் தடுப்பது, குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பது, பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது மற்றும் போக்சோ சட்டம் குறித்தும் விரிவாக எடுத்து கூறினார்.
மேலும் குற்ற நடவடிக்கைகளுக்கு குழந்தைகள் சேவை எண் 1098, காவல் துறை எண் 100, பெண்கள் உதவி எண் 181 ஆகிய இலவச எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என இவ்வாறு கூறினார். இதில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தர்மேந்திரன், சமூகப் பணியாளர் திவ்யா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.



