திருச்சி, ஜூலை 18 –
அச்சு ஊடகம், தொலைக்காட்சி ஊடகத்தை சேர்ந்த செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக்காரர்கள் குறிப்பிட்ட நேரம் இன்றி பகல் இரவு என்று பாராமல் பணியாற்றி வருகின்றனர். தங்களின் ஆரோக்கியம் குறித்து கருத்தில் கொள்ளாமல் பணியாற்றி வருகின்றனர். மேலும் தங்கள் உடல்நிலையில் முறையான அக்கறை எடுத்துக் கொள்ளாததாலும், அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளாததால் பல செய்தியாளர்களும், ஒளிப்பதிவாளர்களும் புகைப்படக்காரர்களும் இயற்கை எய்தி உள்ளனர்.
இச்செய்தி அறிந்த திருச்சி காவேரி மருத்துவமனை நிர்வாகத்தினர் திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப் செய்தியாளர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பத்திரிகையாளர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் கடந்த இரண்டு நாட்களாக காவேரி மருத்துவமனையில் தத்தம் உடல் பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
காவிரி மருத்துவமனையில் திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப்பை சேர்ந்த 79 உறுப்பினர்களுக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்பட 48 வகையான பரிசோதனைகள், இதய பரிசோதனை(இசிஜி, எக்கோ, டிரட் மில்), கல்லீரல், சிறுநீரக பரிசோதனை, எக்ஸ்ரே உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பரிசோதனைகள் கட்டணமின்றி மேற்கொள்ளப்பட்டன. பத்திரிகையாளர்களின் நலனில் அக்கறை கொண்டு இலவசமாக காவேரி மருத்துவமனை இச்சலுகையை செய்து கொடுத்துள்ளது. இதனால் திருச்சி பத்திரிகை மற்றும் ஊடகத்தினர் பயனடைந்துள்ளனர்.
சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான இந்த மருத்துவ பரிசோதனைகளை முற்றிலும் இலவசமாக வழங்கி, பத்திரிகையாளர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்த காவேரி மருத்துவமனை நிர்வாகத்திற்கு திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ்&மீடியா கிளப் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், முகாமை ஏற்பாடு செய்த காவேரி மருத்துவமனை பிஆர்ஓ மனோஜ் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ்&மீடியா கிளப் சார்பில் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.



