தஞ்சாவூர், ஜூன் 29 –
திமுக எங்களுக்கு எந்தவித அழுத்தத்தையும் கொடுக்கவில்லை என்று தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறினார். தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மேட்டூர் அணை திறக்கப்படணும், உவரி நீர் உள்பட தண்ணீர் நமக்கு திறந்து விடப்பட வேண்டும் என்பது ஏற்கனவே ஒப்பந்தம் அதை கர்நாடக அரசு மதித்து நடக்க வேண்டும். குடிநீருக்காக தமிழ்நாட்டில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எனவே கர்நாடக அரசு ஒப்பந்தப்படி நடந்து கொள்ள வேண்டும். தமிழக அரசு விவசாயிகளின் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
பயிர் கடன்கள் உள்பட மத்திய அரசு நமக்குரிய நிதியை வழங்க வேண்டும். ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய பல நிதிகள் கிடப்பில் இருக்கிறது. 100 நாள் வேலை திட்டத்திற்கு குறைந்தது கூலியாக ரூபாய் 700 வழங்க வேண்டும் மேகதாது பிரச்சனை உட்பட பல்வேறு பிரச்சனைகளில் மையப்படுத்தி, வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம்.
பொதுத்துறை நிறுவனமான நெய்வேலியில் 3 சதவீத பங்குகளை விற்பனை என்ற முடிவு ஏற்கத்தக்கது அல்ல. அதை கண்டித்து இடதுசாரிகள் ஜூலை முதல் வாரம் போராட்டம் நடத்த உள்ளோம். தற்போது உலக கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது என்றுமில்லாத வகையில் ஆசிய நாடுகள் அந்த போட்டியில் பங்கேற்கின்றன. இந்தியாவும் அது போன்ற உலக கோப்பையில் பங்கேற்பதற்குரிய வகையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியின் போது மத்திய அரசு பொது விடுமுறை அறிவிக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்த வரையில் நாங்கள் திமுக கூட்டணியில் இருந்தபோது திமுக எங்களுக்கு எவ்வித அழுத்தத்தையும், நிர்பந்தத்தையும் அளிக்கவில்லை. அரசியல் சூழலில் தனி பெரும்பான்மை கட்சியாக தவெக உருவெடுத்து இருக்கிறது. அவர்கள் எங்களிடம் ஆதரவு கேட்டார்கள். திமுக, அதிமுக ஆட்சி அமைக்க முடியாத சூழல் இதனால் நாங்கள் ஆதரவு அளித்தோம்.
எந்த குதிரை பேரத்தையும் கம்யூனிஸ்டுகள் ஏற்பதில்லை விரும்புவதில்லை. அதேபோல் எந்த சோபா அரசியலையும், எந்த கல்லாப்பெட்டி அரசியலும் கம்யூனிஸ்டுகள் நிராகரிக்கிறோம். ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சி தாவுவது எங்களுக்கு பொருத்தம் இல்லை. அது போன்ற அரசியலில் கம்யூனிஸ்டுகள் என்றைக்குமே ஈடுபட்டதில்லை. எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை நாங்கள் அதனை நிராகரிக்கிறோம்.
எந்த தேர்வு முறையிலும் முறை கேடுகள் கூடாது, அவ்வாறு வந்தால் அரசு உடனடியாக தலையிட்டு அது பற்றிய ஒரு விசாரணை நடத்தி நீதியின் பக்கமும், சட்டத்தின் பக்கமும் நிற்க வேண்டும் என்பது எங்கள் நிலை, நாட்டு மக்களுக்கு வெளிப்படை தன்மையை அறிவிப்பதுதான் வெள்ளை அறிக்கை அது அரசின் உண்மையான அறிக்கையாகவும் அடுத்த அரசு எத்தகைய கொள்கை வழியில் நகர்வது என்பதையும் சேர்த்து இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



