தருமபுரி, ஜூலை 29 –
தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் சோளிங்கரில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து தருமபுரி பழைய ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார்.
சோளிங்கரில் செய்தி சேகரிக்கச் சென்ற தினகரன் நாளிதழ் செய்தியாளர் அரங்கநாதன் மற்றும் தினமலர் நாளிதழ் செய்தியாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் மீது த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் கபில், அவரது தம்பி மற்றும் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்த இரு செய்தியாளர்களும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த செய்தியாளர்கள், தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் அனைவரையும் காவல்துறையினர் உடனடியாக கைது செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். மேலும், தமிழக அரசு பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்றும், செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் புகழேந்தி, மாவட்ட செய்தித் தொடர்பாளர் ராமதாஸ், மாவட்ட துணைச் செயலாளர் நந்தகுமார், முன்னாள் மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட இணைச் செயலாளர் குருபிரசாத் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஏராளமான செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.



