தருமபுரி, ஏப்ரல் 21 –
தருமபுரி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும் வெள்ளக்கல் மற்றும் மல்லிக்குட்டை தீர்த்தகுளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் கிராமம் கிராமமாக சென்று வேட்பாளர் சௌமியா அன்புமணி மாம்பழம் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து அவர் கூறியதாவது: அதிமுக தலைமையிலான அரசு அமைந்தவுடன் மகளிர் உரிமை தொகை ரூ. 2000 ஆக உயர்த்தி வழங்கப்படவேண்டும். விவசாயிகளை காக்க காவேரியிலிருந்து கடலில் கலக்கும் உபரி நீரை மீன் மோட்டார் மூலம் ஏரி, குளம் ஆகியவைகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். சிப்காட் பணி விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒகேனக்கல் திட்டம் செயல்படுத்தப்படும்.
தருமபுரி முதல் மொரப்பூர் வரை ரயில்வே பணி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் . மல்லிக்குட்டை தீர்த்தகுளம் சாலையை சீரமைக்கப்படும் என்றார். பாஜக மாவட்ட செயலாளர் சரவணன், பாமக சாந்தமூர்த்தி, அதிமுக நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் பழனி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் உடனிருந்தனர்.



