தருமபுரி, ஜூன் 24 –
தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (22) வெல்டிங் தொழிலாளி இவர் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி 7 வயது சிறுவனிடம் நைசாக பேச்சு கொடுத்து விளையாட அழைத்துள்ளார். இதை நம்பி அந்த சிறுவன் பிரகாஷ் உடன் சென்றான். சிறுவனை பிரகாஷ் பயன்பாடுயின்றி இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு சிறுவனின் உடைகளை அவிழ்த்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவன் அவரிடம் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். நடந்ததை சிறுவன் வெளியே சொல்லி விடுவான் என்று பிரகாஷ் அச்சமடைந்தார். எனவே தப்பித்சென்ற சிறுவனின் கழுத்தை நெரித்து பிரகாஷ் கொலை செய்தார். பின்னர் அவனது உடலை மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மேலேயே விட்டு விட்டு பிரகாஷ் அங்கிருந்து தப்பிவிட்டார்.
இந்த நிலையில் சிறுவனை காணாமல் தவித்த அவனது பெற்றோர் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுவன் பிரகாஷ் உடன் சென்றது தெரியவந்தது. காவல்துறையினர் பிரகாசை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுவன் பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் பிரகாசை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தருமபுரி மாவட்ட போக்சோ சிறப்பு கோட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் 10 பக்கம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, 23 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் நீதிபதி அசின் பானு பரபரப்பு தீர்ப்பளித்தார். அதில் பிரகாஷ் மீது குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக பிரகாசுக்கு தூக்கு தண்டனையும், ரூ.10,000 அபராதமும், சிறுவனை கொலை செய்த குற்றத்திற்காக மற்றொரு தூக்கு தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த அபராதத்தினை கட்ட தவறினால் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். பாலியல் வன்கொடுமை செய்து சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு இரட்டை தூக்கி தண்டனை விதித்து போக்சோ சிறப்பு கோர்ட் அளித்த தீர்ப்பு தருமபுரியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


