தேனி, ஜூலை 28 –
தேனி மாவட்டத்தில் தமிழ்நாடுநாள் விழாவினை கொண்டாடும் வகையில் தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டப் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (28.07.2026) பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் வழங்கினார்.
தமிழ்நாடுநாள் விழாவினை முன்னிட்டு, மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டப் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் வகையில், பேச்சுப்போட்டியில் முதலிடம் பெற்ற தேவாரம் இந்து நாடார் உறவின்முறை பதின்ம மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவி மா.யாசினி, இரண்டாமிடம் பெற்ற பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவி ரா.ஜெசிந்தா, மூன்றாமிடம் பெற்ற அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவி நா.அஸ்வினி மற்றும் கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்ற முத்துதேவன்பட்டியில் உள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை பதின்ம மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் ர.பா.தனுஸ்ரீ, இரண்டாமிடம் பெற்ற இராயப்பன்பட்டி சவரிமுத்து உடையார் நினைவு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவி சு.அதினா, மூன்றாமிடம் பெற்ற கம்பம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவி மு.ஆஃபினா ரம்ஜியா ஆகியோருக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000க்கான ரொக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கி, மென்மேலும் பல வெற்றிகள் பெற மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்நிகழ்வில் தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பாப்பாலெட்சுமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.



