தஞ்சாவூர், ஏப்ரல் 18 –
தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றங்களில் மாவட்ட சமரச மையம் சார்பில் சமரச நாள் விழா நடைபெற்றது. தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விழாவை சமரச மையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பி. வேல்முருகன் தொடங்கி வைத்து பேசியதாவது: அனைத்து மாவட்ட நீதிமன்ற ங்களிலும் சமரசமையம் சென்னை உயர் நீதிமன்றத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வழக்குத்தரப்பினர் தங்களுடைய முரண்பாடுகளை நேரடியாக பயிற்சி பெற்ற சமரசர்கள் முன்னிலையில் பேசி சுமூகமான தீர்வு காண்பதற்காக இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்கு எந்தவித கூடுதல் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. சமரசம் காணும் வழக்குகளில் செலுத்தப்பட்ட நீதிமன்றக் கட்டணங்கள் திருப்பி வழங்கப்படுகின்றன. சமரசமாக பேசி முடிக்கப்படும்.
வழக்குகளுக்கு மேல்முறையீடு இல்லை. சமரச முடிவுகளில் காத்திருப்பு நேரங்களும், பொருள் செலவுகளும் மீதப்படுகின்றன. வழக்குரைஞர்கள் நிலுவையிலுள்ள தங்களது வழக்குகளை சமரச மையத்துக்கு அனுப்பி தீர்வு காண முன்வர வேண்டும் என்றார். நிகழ்வில் நீதிபதிகள், வழக்குரைஞர் சங்க உறுப்பினர்கள், சமரசர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



