நாகர்கோவில், ஜூலை 25 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரணியல் நீர்வளத்துறை பகுதிக்குட்பட்ட பாசன கால்வாய்களை தூர்வாரி உடனடியாக தண்ணீர் விடு வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரணியல் கடைவரம்பு விவசாயிகள் சார்பில் தக்கலை நீர்வளத்துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக குமரி பாசனத்துறையினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி இரணியல் பாசன கால்வாய் தலைவர் ஜேசுதாஸ் தலைமையில், குமரி பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ முன்னிலையில் தக்கலை நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த திரளான விவசாயிகள் வந்தனர்.
இதில் பாசனத்துறை மாவட்டகுழு உறுப்பினர் முருகேசபிள்ளை, கால்வாய் தலைவர்கள் அருளானந்த ஜார்ஜ், ராஜ்குமார், ஜெனில்சிங், ஏசுதாஸ், முன்னாள் தலைவர் விஜயகுமார், உறுப்பினர்கள் டோனிபெலிக்ஸ், ஜஸ்டின் மற்றும் விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது தக்கலை போலீஸார்பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ததுடன், பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். காத்திருப்பு போராட்டம் துவங்கியபோது நீர்வளத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. நீர்வளத்துறை தக்கலை உதவி செயற்பொறியாளர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உதவி பொறியாளர். வினிஷா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் தூர்வாரும் பணிகள், மற்றும் காங்கிரீட் வேலைகளை உடனடி முழுமையாக முடிக்கப்படும். அரசுக்கு இழப்புஏற்படுத்தி வரும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, அடைபட்டு கிடக்கும் மடைகள் சீரமைத்து தரப்படும். உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் சமரசமானது. அதே நேரம் வாக்குதிகளை அதிகாரிகள் மீறினால் அடுத்தகட்ட போராட்டங்களை உடனே முன்னெடுத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டது.



