தக்கலை, ஜூலை 17 –
தக்கலை அருகே திருவிதாங்கோட்டை சேர்ந்தவர் மாகின் மகள் நஜ்மா (27). மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: திருவிதாங்கோடு பகுதி சேர்ந்த முகமது ஷாபி மகன் பெரிஸ் அஜ்மல் (29) என்பவருக்கும் எனக்கும் கடந்த 19-1-2020ல் திருமணம் நடைபெற்றது. அப்போது 70 பவுன் நகை ரூபாய் 7 லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்த 4-வது நாளில் எனது நகையை பாதுகாப்பாக வைப்பதாக கூறி கணவர் வீட்டில் உள்ளவர்கள் வாங்கினர். பின்னர் மூன்று மாதம் கடந்த நிலையில் எனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சி செல்லும் போது நகையை கேட்டபோது கணவரின் தந்தை முகமது பெயரில் வங்கியில் நகை அடகு வைத்திருப்பதாக தெரிவித்தனர்.
மேலும் நகையை தற்போது மீட்டு தர முடியாது என்று தெரிவித்தனர். மேலும் எனது பெற்றோர் பெயரில் உள்ள வீட்டை எழுதி தரவும் கேட்டனர். இல்லாவிட்டால் கூடுதலாக 50 பவுன் நகை 10 லட்ச ரூபாய் பெற்று தர வேண்டும் என்று கூறினார். எனது கணவர் இரவு நேரத்தில் மது குடித்து விட்டு வந்து என்னை தாக்கினார். இதனை தொடர்ந்து எனது பெற்றோர் மீண்டும் 15 பவுன் நகை கொடுத்தனர். மேலும் என்னை வரதட்சனை கேட்டு வீட்டை விட்டு துரத்தி விட்டனர். இந்த நிலையில் எனது கணவருக்கு வேற திருமணம் செய்து வைக்கவும் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு உடந்தையாக பெற்றோர் முகமது ஷாபி (60), பீமாஷெரின் (50), உறவினர் ரெனிஷா (22), பஷருதீன் (55), பர்கானா (50) ஆகியோர் இருந்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மீது கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


