கோவை, ஜூன் 25 –
காரமடை டாக்டர் ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம், போதைப்பொருள் தடுப்பு அமைப்பு மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலரும்,கணிதவியல் துறைத்தலைவருமான உமா பிரியா அனைவரையும் வரவேற்றார்.
கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்று தலைமை உரையாற்றினார். மேட்டுப்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் மற்றும் காரமடை காவல் ஆய்வாளர் முருகையன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினர். அவர்கள் பேசிய உரையில், “போதை கலாச்சாரம் இன்று இளைஞர்கள் மத்தியில் மிக அதிகமாக பரவி வருகிறது. அதற்கு அடிமையாகி விட்டால் அவர்களை அது அழிவின் பாதைக்கு அழைத்துச் செல்லும். இதனால் வீட்டிற்கும், சமுதாயத்திற்கும் கேடு உண்டாகும். இதனை வேரோடு களைய வேண்டும்.
வயது வரம்பு இன்றி போதைப் பழக்கம் சமுதாயத்தில் வேரூன்றி உள்ளது. தவறான நட்பினால் இன்றைய இளைஞர்கள் இப்பழக்கத்திற்கு அடிமையாகி பல குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். போதைப்பொருள் உபயோகிப்பவரின் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. மனக்கட்டுப்பாடும், சுய முயற்சியும் இருந்தால் எளிதாக அதிலிருந்து மீண்டு வர முடியும்.
யாராவது போதைப்பொருளை பயன்படுத்துவது தெரிந்தால் அதனை காவல்துறைக்கு தெரிவிக்கலாம். காவல்துறை அதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுக்கும்” என்று மாணவர்களுக்கு பல கருத்துக்களை எடுத்துரைத்தனர். நிகழ்வின் நிறைவாக உயிர் தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் சாரா நன்றியுரை கூறினார்.



