சேலம், ஜூலை 10 –
வேளாண் உற்பத்தியை மேம்படுத்தி விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கு உட்கட்டமைப்பு வசதிகள் மிக முக்கிய பங்காற்றுகிறது. அறுவடைக்குப் பின் இழப்பினை குறைத்து விளை பொருட்களை மதிப்பு கூட்டி விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைத்திட வேளாண் உட்கட்டமைப்பு வசதிகள் இன்றி அமையாதது. இதற்காக அரசு வேளாண் உள் கட்டமைப்பு நிதியை உருவாக்கியுள்ளது. குறிப்பாக 2026 – 2027- ஆம் நிதியாண்டில் இந்த திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்திற்கு 64 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 2 கோடி வரையிலான கடனுக்கு ஏழு ஆண்டு காலத்திற்கு 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் மட்டுமே பயனாளிகளின் பங்களிப்பாகும். மேலும் அரசின் மற்ற திட்டங்களில் மானியம் பெறும் விவசாயிகளும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
இந்த திட்டத்தின் கீழ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள், சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்புகள், விவசாயிகள் கூட்டுப் பொறுப்பு குழுக்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள், வேளாண் தொழில் முனைவோர், புதிதாக தொழில் துவங்க முன்வருபவர்கள், வேளாண் விளைபொருட்கள் விற்பனை குழுக்கள், தேசிய மற்றும் மாநில கூட்டமைப்புகள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
அறுவடைக்குப் பிந்தைய வேளாண் திட்டங்களை மின்னணு வணிக மையங்கள், சேமிப்பு கிடங்குகள், சேமிப்பு கலங்கள், சிப்பம் கட்டும் அறைகள், குளிர் பதன கிடங்குகள், பழுக்க வைக்கும் கூடங்கள், தரம் பிரிக்கும் இயந்திரங்கள், போக்குவரத்து வசதிகள் முதன்மைப்படுத்தும் மையங்கள், பண்ணை கழிவு மேலாண்மை சார்ந்த உள்கட்டமைப்பு, மண்புழு உரம் தயாரித்தல், சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள், உயிரி எரிவாயு ஆலை, உயிரி ஊக்கி உற்பத்தி அலகுகள், துல்லிய விவசாயத்திற்கான உள்கட்டமைப்பு நாற்றங்கால் திசு வளர்ப்பு,ஹைட்ரோபோனிக் காளான் வளர்ப்பு, ஏரோபோனிக் விவசாயம், பாலி ஹவுஸ், கிரீன் ஹவுஸ் டிராக்டர், விதை சுத்திகரிப்பு, தேன் பதப்படுத்துதல், பட்டுப்புழு வளர்ப்பு ஆகியவற்றிற்கு கடன் பெறலாம்.
அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள், பட்டியலிடப்பட்ட கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், சிறிய நிதி வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகம், மாவட்ட மத்திய கூட்டுறவு கடன் வங்கிகளுடன் இணைப்பில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவை கடன் வழங்க தகுதி உள்ள நிறுவனங்கள் ஆகும். இதில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறைக்கு ரூ. 25 கோடியும், வேளாண்மை துறைக்கு ரூ.5 கோடியும், தோட்டக்கலைத் துறைக்கு ரூ 6 கோடியும், வேளாண் பொறியியல் துறைக்கு ரூபாய் 6 கோடியும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ 5 கோடியும், தமிழ்நாடு தொழில் துறை மற்றும் வணிக துறைக்கு ரூ. 13 கோடியும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு ரூ 4 கோடியும் கடன் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வேளாண்மை துறை அலுவலர்கள், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழக அலுவலர்கள், தமிழ்நாடு தொழில் துறை மற்றும் வணிக துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். மேலும் இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் https ://agriinfra.dac.gov.in. என்ற இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விரிவான திட்ட அறிக்கையுடன் வங்கி கிளைகளில் விண்ணப்பித்து விவசாயிகள் பயன் பெறுமாறு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் கூறியுள்ளார்.


