நாகர்கோவில், ஜூன் 11 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டியது. இன்று குமரி மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து காலை முதலே மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டியதால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். சில மாணவிகள் மழையிலிருந்து தப்பிக்க குடை பிடித்தவாறும், ரெயின் கோட்டு அணிந்தும் பள்ளிக்கு சென்று வந்தனர். சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கன்னியாகுமரி பகுதியில் காலை முதலே கனமழை பெய்ததால் சுற்றுலாப் பணிகள் தங்களது விடுதியில் முடங்கி கிடந்தனர். இதனால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அஞ்சுகிராமம், மயிலாடி, கொட்டாரம், சுசீந்திரம் ஆகிய பகுதிகளிலும் இன்று கனமழை பெய்தது. சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.
குமரி மலையோரப் பகுதி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர் வரத்து அதிகரித்து உள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் சுமார் மூன்று அடி உயர்ந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்டம் முழுவதும் ஆறுகளில், கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாசன குளங்கள் வேகமாக நிரப்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குலசேகரம், தடிக்காரங்கோணம், கீரிப்பாறை போன்ற மலையோரப் பகுதியில் ரப்பர் தோட்டங்களில் மழை காரணமாக ரப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தோவாளை, செண்பகராமன்புதூர், மயிலாடி போன்ற பகுதியில் உள்ள செங்கல் சூளைகளிலும் தொடர்மழை காரணமாக செங்கல் உற்பத்தியும் முடங்கியது.


