தேனி, ஆக. 15 –
வடபுதுப்பட்டி ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் கலந்து கொண்டார். சுதந்திர தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: கிராம சபை கூட்டத்தின் நோக்கம் ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை கண்டறிந்து பொதுமக்களின் முன்னிலையில் விவாதித்து, அதனை செயல்படுத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாகும். கிராமப்புறங்களை விரைவாக முன்னேற்றம் அடைய செய்யவும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தவும் அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்பொழுது உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி தீர்வு பெறலாம். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைப் பெற தகுதியுள்ள பெண்களும் இம்முகாம்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இம்முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தன்னார்வலர்கள் மூலம் உங்கள் வீட்டிற்கே நேரடியாக வந்து தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், அரசின் நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே கொண்டு சேர்ப்பதற்காக சமூக தரவுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இக்கிராம சபை கூட்டங்கள் மூலம் கிராமப்புறத்திற்கு தேவையான குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பொதுமக்களின் ஒருமித்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கிராமப்புற மக்களின் நலனுக்காக நடத்தப்படும் இதுபோன்ற கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை 4 நபர்களுக்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அடையாள அட்டை 5 நபர்களுக்கும், வேளாண்மை துறை சார்பாக 2 நபர்களுக்கு மக்காச்சோள விதைகள் மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் 1 நபருக்கு பழக்கன்றுகளும், 20 நபர்களுக்கு காய்கறி விதை தொகுப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். பின்னர் வீரபாண்டி அருள்மிகு கெளமாரியம்மன் திருக்கோவிலில் சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற பொது விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அம்மன் புடவைகளை வழங்கி பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
இந்நிகழ்வுகளில் பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன், திட்ட இயக்குநர்கள் அபிதா ஹனிப் (ஊரக வளர்ச்சி), சந்திரா (மகளிர் திட்டம்), இணை இயக்குநர்கள் சாந்தாமணி (வேளாண்மைத்துறை), கோயில்ராஜா (கால்நடை பராமரிப்புத்துறை), துணை இயக்குநர் (தோட்டக்கலை) நிர்மலா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) முருகையா, மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளாதேவி, வட்டாட்சியர் மருதுபாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராகவன் மற்றும் உதவி ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) ஜெயதேவி, வீரபாண்டி பேரூராட்சித்தலைவர் கீதா சசி, செயல் அலுவலர்கள் நாராயணி (கோவில்), கணேசன் (பேரூராட்சி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



