சுசீந்திரம், ஏப். 27 –
பழமையான கோவில்களில் சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவில் ஒன்றாகும். இந்தக் கோவிலில் வருடம் தோறும் சித்திரை தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு சித்திரை தெப்பத் திருவிழாவிற்காக கடந்த 18ஆம் தேதி காலை 11:00 மணி அளவில் கொடியேற்றுத்துடன் திருவிழா துவங்கியது. காலை மாலை வேளைகளில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வாகனப்பவனியும் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
எட்டாம் திருவிழாவான நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் காலை 10 மணிக்கு அலங்கார மண்டபத்தில் வைத்து நடராஜமூர்த்திக்கும் சிவகாமி அம்பாளுக்கும் அஷ்டாபிஷேகமும் அதுபோல மாலை ஐந்து முப்பது மணிக்கு அலங்கார மண்டபத்தில் வைத்து நடராஜமூர்த்திக்கும் சிவகாமி அம்பாளுக்கும் அஸ்டாபிஷேகம் நடைபெற்றது. இரவு ஏழு முப்பது மணிக்கு சிதம்பரேஷ்வரர் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் இரவு ஒன்பது முப்பது மணிக்கு பறங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஒன்பதாம் திருவிழாவான நேற்று காலை 6 மணிக்கு இந்திர வாகனத்தில் மகாவிஷ்ணு அம்பாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் காலை எட்டு முப்பது மணி அளவில் விநாயகர் தேர் சப்பரத்தேர் அம்மன் தேரில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சுவாமி அம்பாள் கோவிலை ஒரு முறை சுற்றி வலம் வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் பெருமளவு கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்கு சுவாமி மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் இரவு 12 மணிக்கு சப்த்தாவர்னம் நடைபெற்றது.
இன்று பத்தாம் திருவிழாவை முன்னிட்டு இரவு 8 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி அம்பாள் பெருமாள் ஆகியோர் தெப்பக்குளத்தை சுற்றி மூன்று முறை வலம் வரும் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு திரு ஆறாட்டு நடைபெறும் விழா ஏற்பாடுகளை கோவில்களின் இணை ஆணையர் ஜான்சிராணி, கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் தாணு மாலய சுவாமி கோவில் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.



