நாகர்கோவில், ஜூலை 3 –
இந்திய அஞ்சல் துறையின் கன்னியாகுமரி கோட்டம் சார்பில் சிறுசேமிப்புத் திட்டங்களில் புதிய கணக்குகள் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அஞ்சல் சிறப்பு போட்டிகளை ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடத்துகிறது. இப்போட்டியில், ஒவ்வொரு அஞ்சல் சேமிப்பு முகவரும் வைப்பு நிதி, சேமிப்பு உள்ளிட்ட 100 புதிய கணக்குகளை தொடங்கும் இலக்குடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
100 புதிய கணக்குகளைத் தொடங்கும் அனைத்து முகவர்களுக்கும் கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், அதிக எண்ணிக்கையிலான புதிய கணக்குகளைத் தொடங்கி முன்னிலை வகிக்கும் முதல் மூன்று முகவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
இந்த போட்டி மூலம் பொதுமக்களிடம் அஞ்சல் துறையின் சிறுசேமிப்புத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதுடன், முகவர்களின் பங்களிப்பை கௌரவிப்பதே நோக்கமாகும்.
இதுகுறித்து கன்னியாகுமரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சலக அலுவலர்களும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள முகவர்களை முழுமையாக ஊக்குவித்து, போட்டியை வெற்றிகரமாக நடத்திட ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், பொதுமக்கள் அஞ்சல் சேமிப்புத் திட்டங்களில் அதிகளவில் இணைந்து பயன்பெறுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


