தென்தாமரைகுளம், ஜூலை 27 –
சாமிதோப்பு அன்புவனத்தில் மன்னர் வெங்கலராஜன் 502 வது ஜெயந்தி விழா மற்றும் குமரி நாட்டுச் சோழ மன்னன் வெங்கலராஜன் வரலாற்று ஆய்வு புத்தக நூல் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, சாமிதோப்பு மகாகுரு. பாலபிரஜாபதி அடிகளார், என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., ஆகியோர் தலைமை வகித்தனர். வெங்கலராஜன் அறக்கட்டளை தலைவர் எம்.நீலம் மதுமயன் மற்றும் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகிலன்விளை ஆர்.ஜோதீஸ்வரன் வரவேற்றார்.
குமரி நாட்டுச் சோழ மன்னன் வெங்கலராஜன் வரலாற்று ஆய்வு புத்தக நூலை பால. பிரஜாபதி அடிகளார் வெளியிட திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், முன்னாள் எம்.பி. பி.சவுந்தரராஜன், சிவந்தி ஆதித்தனார் கல்லூரி தலைவர் சி.தர்மலிங்கம் உடையார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் கன்னியாகுமரி மாவட்டம், கோவில்விளை கடற்கரைப் பகுதியில் உள்ள வெங்கலராஜன் கோட்டை மற்றும் அதனைச் சார்ந்த பகுதியினை தொல்லியல் துறை கையகப்படுத்தி பாதுகாத்து அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு வெங்கலராஜன் வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும். அப்பகுதியில் மன்னர் வெங்கலராஜன் உருவச்சிலை அமைக்க வேண்டும். வெங்கலராஜன் வாழ்க்கை வரலாற்றை தமிழக பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். வெங்கலராஜன் கோட்டை சந்திப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இவ்விழாவில், பா.தாமரை தினேஷ், வழக்கறிஞர் என்.பார்த்தசாரதி, சாமிதோப்பு ஊராட்சி முன்னாள் தலைவர் மதிவாணன், சமூக ஆர்வலர் சவுந்தரராஜன், எழுத்தாளர் குமரி ஆதவன், குமரி முத்தமிழ் மன்றத் தலைவர் முழங்குழி லாசர், தமிழ்நாடு கலை இலக்கிய கழக செயலர் முகிலை பாஸ்ரீ, கவிஞர் பாபு, எழுத்தாளர் மணி தணிகை குமார், வெங்கலராஜன் அறக்கட்டளை நிர்வாகிகள் ஏ.எம்.அரசு, எஸ்.ராஜன், பொன் டேவிட், ஏ.தினேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



