வன ஆர்வலரின் கேமராவில் சிக்கியதால் பரபரப்பு
மார்த்தாண்டம், செப். 2:
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு கோதையாற்றில் ராட்சத முதலை ஒன்று இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில், பல மாதங்களாக வனத்துறையினரின் பல்வேறு முயற்சிகளுக்கும் அது சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. கோதையாற்றின் உறைகிணறு பகுதியில் முதலை கிடந்தது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அதனைப் பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் முதலை சிக்காததால் ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் உள்ளனர்.
இதற்கிடையே, முதலை அவ்வப்போது கோதையாற்றில் தண்ணீரில் மிதந்து செல்வது பொதுமக்களின் கவனத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து சென்னையைச் சேர்ந்த முதலையைப் பிடிக்கும் நிபுணர்கள் கடந்த மாதம் முதல் கோதையாற்றில் முகாமிட்டு, முதலை நடமாட்டத்தை கண்காணித்து அதனைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு உத்திகளை கையாண்டும் இதுவரை முதலை அவர்களின் கண்களில் சிக்காமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில், புதுக்கடை அருகே முஞ்சிறை பகுதியைச் சேர்ந்த வன ஆர்வலரும் மலையேற்ற வீரருமான மகாதேவன் (42), நேற்று முன்தினம் கோதையாற்றின் செங்குழி பகுதியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஆற்றின் கரையில் நின்றிருந்தபோது, தண்ணீரில் ஒரு முதலை மிதந்து செல்வதை அவர் கவனித்தார். உடனடியாக தனது கேமரா மூலம் அந்த காட்சியை பதிவு செய்தார்.
முதலில் ஆற்றின் நடுப்பகுதியில் தண்ணீரில் மிதந்தபடி சென்ற முதலை, பின்னர் ஆற்றின் ஒரு கரையை நோக்கிச் சென்று கரையில் ஏறிய காட்சியும் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் முதலை இருக்கும் இடத்தை கண்டறிந்து அதனைப் பிடிக்க உதவக்கூடும் என்பதால், அவற்றை சென்னையைச் சேர்ந்த முதலை பிடிக்கும் நிபுணர்களிடம் வழங்க மகாதேவன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல மாதங்களாக வனத்துறையினருக்கும் முதலை பிடிக்கும் நிபுணர்களுக்கும் போக்கு காட்டி வந்த ராட்சத முதலை தற்போது வன ஆர்வலரின் கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதனால் கோதையாற்றில் முதலை நடமாட்டம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.



