மார்த்தாண்டம், ஆக. 5 –
குமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கண்ணகோடு பகுதி அருகே இறந்த நிலையில் வாலிபர் ஒருவரின் உடல் சடலமாக மிதந்த நிலையில் காணப்பட்டது. மார்த்தாண்டம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அவர் மூன்று தினங்களுக்கு முன் இறந்து தெரியவந்தது. அவரது உடலில் பல இடங்களில் சிவசேனா கட்சி சம்மந்தமாக பச்சை குத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் உடலில் சில இடங்களில் காயங்களும் காணப்பட்டது. அதன் அடிப்படையில் நடத்திய விசாரணையில் இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்ட உடல் கேரளா செங்கவிளை பகுதியை சேர்ந்த சதீசன் அதுல் (32) என்பதும் இவர் சிவசேனா கட்சியில் மாநில செயலாளராக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து கேரளாவை சேர்ந்த சிவசேனா பிரமுகர்கள் மார்த்தாண்டம் வருகை தந்து மார்த்தாண்டம் டிஎஸ்பி அலுவலகத்தில் குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை வைத்தனர். போலீசார் சிவசேனா பிரமுகர் எப்படி வந்தார்? உடல் ஆற்றில் கிடந்தது எவ்வாறு? என்பதை உடலில் காணப்படும் காயங்கள் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் போலீசார் அவரது உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவரது தலையில் ஆழமாக காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏதேனும் ஆயுதங்களால் தலையில் பலமாக குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில் போலீசார் இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீசாரின் தீவிர விசாரணையில் இந்த கொலையின் பின்னணியில் உண்மையான குற்றவாளிகள் 4 பேருக்கு தொடர்புள்ளது தெரியவந்துள்ளது. இதை அடுத்து குமரி எல்லை மற்றும் மார்த்தாண்டம் சுற்று வட்டார பகுதிகளில் சிவசேனா பிரமுகரின் கார்கள் சென்ற வழித்தடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் சிவ சேனா பிரமுகரின் உடல் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் இருந்து உடலை குற்றவாளிகளை கைது செய்யும் வரை அவரது உடலை பெற மாட்டோம் என கடந்த ஐந்து தினங்களாக சிவசேனாவினரும் உறவினர்களும் கூறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் கொலை குற்றத்தில் ஈடுபட்ட உண்ணாமலை கடை ஆர் சி தெருவை சேர்ந்த நிதீஷ் (29), மாங்கரை காம்ப்ளார் பகுதியை சேர்ந்த பெர்லின் ஜியோ (27) ஆகியோரை அதிரடியாக தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் கொலைக்கு முக்கிய காரணமாக இருந்த குழித்துறை கல்லுகெட்டி பகுதியைச் சேர்ந்த தந்தை மகன் , இருவரும் தலைமறைவாக உள்ளனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சிவசேனா பிரமுகரை கல்லுகெட்டி பகுதியில் உள்ள வீட்டில் வைத்து கொலை செய்து சிவசேனா பிரமுகரின் உடலை மூன்று பேருமாக ஏற்றி மார்த்தாண்டத்தை அடுத்த கண்ணக்கோடு பகுதி ரயில்வே மேம்பாலத்தில் நின்று உடலை ஆற்றில் வீசி உள்ளனர்.
பின்னர் அவரது காரை சிதறால் மலைக்கோயில் அருகாமையில் கொண்டு விட்டு விட்டு மாங்கரை பகுதியை சேர்ந்த பெர்லின் ஜியோ என்பவரை காரில் வரவழைத்து அவர் மூலம் தப்பி சென்றுள்ளனர். இதில் தப்பி செல்ல உதவிய பெர்லின் ஜியோ மற்றும் கொலை குற்றவாளிகளுக்கு உதவிய நிதிஷ் ஆகியோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டால் மட்டுமே கொலைக்கான உண்மை காரணங்கள் தெரியவரும் என கூறப்படுகிறது.


