மார்த்தாண்டம், செப். 2:
தமிழகத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க வருவாய்த்துறை மற்றும் உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மார்த்தாண்டம் அருகே கேரளாவுக்கு வேனில் கடத்த முயன்ற 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் அனிதா குமாரி தலைமையில், வருவாய் ஆய்வாளர் மைக்கேல் சுந்தர்ராஜ் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை முஞ்சிறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த சரக்கு வேனை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காட்டினர். ஆனால், வேன் நிற்காமல் சென்றதால் அதிகாரிகள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் பின்தொடர்ந்து சென்று மார்த்தாண்டம் மராயபுரம் பகுதியில் வேனை மடக்கிப் பிடித்தனர்.
அப்போது வேனில் இருந்த ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். தொடர்ந்து வேனை சோதனை செய்தபோது, அதில் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வேன் தாசில்தார் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வேனின் உரிமையாளர் யார், தப்பியோடிய ஓட்டுநர் யார், ரேஷன் அரிசி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, கேரளாவில் யாரிடம் ஒப்படைக்க கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.



