மார்த்தாண்டம், பிப். 5 –
இரணியல், பேயன்குழி பகுதியை சேர்ந்தவர் அஜின் செல்வன். கொத்தனார். இவருக்கு திருமணம் ஆகி சஜினி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். சஜினியின் சொந்த ஊர் குலசேகரம் ஆகும். சஜினியின் தந்தை மறைவுக்கு பின் இரண்டு மகளுடன் தனது தாயாருடன் வசித்து வந்தார். கணவர் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.
சஜினியின் மகள்கள் இருவரும் செருப்பாலூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 மற்றும் 6ம் வகுப்பில் படித்து வந்தனர். இந்த நிலையில் அக்காள், தங்கை இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வது வழக்கம்.
இது போல் நேற்று பள்ளி சென்று வந்தபின் இருவரும் சண்டை போட்டதாக தெரிகிறது. இதில் மூத்தவள் அக்ஷயா (13) என்பவர் தங்கையின் தலை முடியை கத்திரிகையால் வெட்டி உள்ளார். இதனால் இளையவள் அழுது கொண்டு இருந்துள்ளார். இவர்களை பாட்டி சமாதானம் செய்ய முயன்றுள்ளார். தங்கை அழுவதை கண்ட அக்ஷயா தாயார் வந்ததும் தண்டிப்பார் என்று பயந்து வீட்டு அறைக்குள் சென்று கதவை பூட்டிவிட்டு இருந்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்கவில்லை.
இரவில் தாயார் வேலை முடிந்து வந்து கதவைத் தட்டியும் கதவு திறக்காததால் உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, அக்ஷயா தாயாரின் சேலையால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் காணப்பட்டார். இது குறித்து குலசேகரம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


