தஞ்சாவூர், நவம்பர் 7 –
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் 30 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் கூறினார்.
தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும். இதில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் குறுவை சாகுபடியில் நெல் கொள்முதலில் தமிழக அரசின் முன்னேற்பாடுகள் முறையாக இல்லாததால் பல இடங்களில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர் களை கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் பயிர் காப்பீடு செய்த அனைவருக்கும் உரிய இழப்பீட்டைப் பெற்றுத் தர வேண்டும்.
2002 ஆண்டு உள்ள வாக்காளர் பட்டியலில் அளவு கோலாகக் கொண்டு தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தத்தை கொண்டு வருகிறது. இதில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கு கேட்கப் படும் ஆவணங்கள் சமர்ப்பிக்க இயலாது. தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் ஒரே மாத காலத்தில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ள முடியாது. இதனால் 20 முதல் 30 சதவீதம் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெறாத நிலை ஏற்படும். இதனால் அவர்கள் வாக்களிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு, இந்திய நாட்டின் குடியுரிமை பறிக்கப்படும்.
குடியுரிமை பறிபோனால் நாட்டில் வசிக்க முடியாத நிலை ஏற்படும். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும். இதில் அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ளலாம். அமைச்சர் நேரு உண்மையிலே ஊழல் செய்திருந்தால் விசாரிக்கட்டும். தேர்தல் வரும் போது பா.ஜனதாவின் எதிரணியில் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசிடம் உள்ள அமலாக்கத்துறை வைத்து வழக்கு பதிவு செய்வது, கைது செய்வது, ஊழல் குற்றச்சாட்டுகள் கூறி மக்கள் மத்தியில் தங்களுக்கான ஆதரவை தேடுவதற்கான தகடு தத்தம் வேலை தான் இது. இவ்வாறு அவர் கூறினார்.



