நாகர்கோவில், மே 25 –
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஜோஸ். நகை வியாபாரியான இவர் கடந்த 16ம் தேதி குருவாயூரிலிருந்து சென்னை சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கான பொதுப் பெட்டியில் பயணம் செய்தார். அந்த ரயில் குமரி மாவட்டம் குழித்துறை ரயில் நிலையத்தை வந்தடைந்த போது தனது பையில் வைத்திருந்த ஒன்றரை கிலோ தங்க நகைகள் திருடப்பட்டு இருப்பதைக் கண்டு ஜோஸ் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்த அவர் உடனடியாக குழித்துறை ரயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க ரயில்வே இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களை கண்டுபிடிப்பதற்காக குழித்துறை மற்றும் திருச்சூர் ரயில் நிலையப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து, விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் திருச்சூர் ரயில் நிலைய சிசிடிவி கேமரா காட்சியில் ஜோசை ஒரு மர்ம கும்பல் பின் தொடர்ந்து வந்தது துல்லியமாக தெரிந்தது. அதனை வைத்து அவர்கள் அடையாளம் காணப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கேரளாவை சேர்ந்த கும்பல் என்பது உறுதியானது. மேலும் அவர்களின் செல்போன் என்னையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
கொள்ளையர்கள் செல்போன் எண்களின் டவர் லொகேஷன் வைத்து போலீசார் கேரளா விரைந்தனர். தொடர்ந்து தனிப்படை போலீசார் திருச்சூர் பகுதியை சேர்ந்த அபுதாஹிர், டோலி, கோபகுமார், சர் புதின், சித்திக் ஆகிய 5 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 35 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ 2 லட்சத்து 33 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட 5 பேரும் நாகர்கோவில் ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி ஒருவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்யவும் அவரிடம் இருந்து மீதமுள்ள நகைகளை மீட்கவும் தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஓடும் ரயிலில் தங்க நகைகளை திருடி சென்ற கொள்ளை கும்பலை நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சிசிடிவி கேமரா கட்சியின் உதவியோடு விரைந்து கைது செய்த ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான தனிப்படை போலீசாரை உயரதிகாரிகள் பாராட்டினர்.



