நாகர்கோவில், ஜூலை 29 –
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட குலசேகரம், களியக்காவிளை, கருங்கல், ஆலஞ்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பேருந்துநிலைய பணிகளை ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், தலைமை வகித்தார். பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி, முன்னிலை வகித்தார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்: பாலப்பள்ளம் முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட ஆலஞ்சி ஜங்சனில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.83 கோடி மதிப்பில் புதிய பேருந்துநிலையம், களியக்காவிளை பிரதான சந்திப்பில் களியக்காவிளை தேர்வு நிலை பேரூராட்சியின் சார்பில் ரூ.9.20 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம், கருங்கல் அரசு மருத்துவமனையில் பழுதடைந்துள்ள மருத்துவ கட்டிடம் போன்றவை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கருங்கல் தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5.22 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கருங்கல் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பணிகளையும் வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என கூறினார். நடைபெற்ற ஆய்வில் உதவி இயக்குநர் பேரூராட்சிகள் கோமதி, களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.



