நாகர்கோவில், மே 13 –
கன்னியாகுமரி மாவட்ட நீர்வளத்துறை சார்பில் இரணியல் மற்றும் கருங்கல் கிளை கால்வாய் புனரமைப்பு பணி மற்றும் நெய்யாறு கால்வாய் நிரந்தர தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு மேற்கொண்டார்.
மாவட்ட நீர்வளத்துறை சார்பில் கல்குளம் வட்டத்திற்குட்பட்ட இரணியல் பிரிவு கால்வாய் மற்றும் அதன் கிளைக் கால்வாய்கள் புனரமைத்தல் பணி ரூ.6 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. மேலும் கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட கருங்கல் கிளை கால்வாய் மற்றும் அதன் சார்பு வாய்க்கால்களை புனரமைத்தல் பணிக்கு கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் நிதிஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணியானது தற்போது வரை 4800 மீட்டர் நீளத்தில் சிமெண்ட் கான்கிரீட் லைனிங், 1570 மீட்டர் நீளத்தில் பீனிங், 180 மீ² பிளாஸ்டரிங், 119 மீட்டர் தடுப்புச் சுவர், 16.50 மீட்டர் தடுப்பு சுவர் உயர்த்தும் பணிகள் என மொத்தம் 45% பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நெய்யாறு பிரதான கால்வாய் நெடுகை நீளம் 9/825 கிமீ தொலைவில் மரியகிரி பகுதியில் ரூ.80.00 இலட்சம் மதிப்பில் கரையில் தடுப்புச் சுவர்கள் கட்டுதல் மற்றும் வெள்ள நீர் ஊருக்குள் புகாதவாறு தடுப்பணைகள் அமைத்தல் உள்ளிட்ட நிரந்திர வெள்ளதடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் மழைக்காலத்திற்கு முன்பாக விரைந்து முடிக்க நீர்வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நடைபெற்ற ஆய்வுகளில் கோதையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர், ஆ.வசந்தி, உதவி செயற்பொறியாளர் ம.கிறிஸ்டோபர் ஜோசப், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



