நாகர்கோவில், ஆக. 28:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள அனைத்து பயனாளிகளின் அடையாளத்தை மின்னணு முறையில் உறுதி செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இதுவரை கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்காக இன்று (ஆக.29) மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
குடும்ப அட்டை உறுப்பினர்கள் அனைவரும் தொடர்ந்து எவ்வித தடையும் இன்றி ரேஷன் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில், தங்களது கைவிரல் ரேகை பதிவை விரைந்து மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார். இதுவரை பதிவு செய்யாதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு சென்று இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யாரேனும் வெளியூரில் வசித்து வந்தால், அவர்கள் தங்களது மின்னணு குடும்ப அட்டை எண்ணை அருகிலுள்ள எந்த நியாய விலைக் கடையிலும் தெரிவித்து கைவிரல் ரேகை பதிவை மேற்கொள்ளலாம். இதற்காக சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டிய அவசியம் இல்லை.
கைவிரல் ரேகை பதிவு செய்யும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், அதற்கு மாற்றாக கண் கருவிழி பதிவு (Iris) முறையைப் பயன்படுத்தி அடையாளத்தை உறுதி செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களின் பதிவை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. எனவே, இதுவரை கைவிரல் ரேகை அல்லது கண் பதிவு மேற்கொள்ளாத குடும்ப அட்டை உறுப்பினர்கள் இன்றைய சிறப்பு முகாமை தவறாமல் பயன்படுத்தி பதிவை நிறைவு செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.



