இராமநாதபுரம், செப்.19.
‘இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பேரூராட்சி பகுதியில் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் மருத்துவக் கழிவுகள், பயன்படுத்தப்பட்ட பேட்டரிகள், டியூப் லைட்டுகள், மின்னணு கழிவுகள், நாப்கின்கள் மற்றும் முகக்கவசங்கள் உள்ளிட்டவற்றை சாதாரண குப்பைகளுடன் கலக்காமல் தனியாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ஆம் தேதி முதல் குப்பைகளை முறையாக தரம் பிரித்து வழங்காத வீடுகளில் இருந்து திடக்கழிவுகள் பெறப்படாது என்றும், விதிகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) செ.மாலதி தெரிவித்துள்ளார்.
பேரூராட்சி பகுதியில் தூய்மைப் பணியை மேம்படுத்த பொதுமக்கள் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



