தருமபுரி, ஜூன் 18 –
தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட அன்னசாகரம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக விசைத்தறி நெசவு தொழில் செய்து வருகின்றனர். தருமபுரி நகராட்சியில் விசைத்தறி கூடத்திற்கு தொழிற்சாலை வரியாக கடந்த 2024 ம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் மாற்றியுள்ளது.
இது நெசவாளிகளுக்கு ஏற்புடையதாக இல்லை எனவும், நகராட்சி நிர்வாக இயக்குனரகம் சுற்றறிக்கையின்படி தமிழக அரசினால் இலவசம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ள வீடுகளில் விசைத்தறிகளை நிறுவி தொழில் நடத்தி வந்தால் அதற்கு தொழிற்சாலை வரி மாற்றம் செய்யவில்லை என சுற்றறிக்கையில் தெளிவாக அறிவித்துள்ளது. தற்போது குடிசைத் தொழில்வரியாகவே தொடரப்பட வேண்டும் என அறிக்கை கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த உத்தரவுக்கு மாறாக தருமபுரி நகராட்சி நிர்வாகம் குடிசைத் தொழில் வரியை தொழிற்சாலை வரியாக மாற்றம் செய்து வந்துள்ளது. நகராட்சியின் மூலம் வழங்கப்பட்டுள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தொழிற்சாலை வரியை ரத்து செய்து பழைய குடிசை வரியை நகராட்சி பெற வேண்டும்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நெசவு தொழில் குடிசை தொழிலாக உள்ள நிலையில் தருமபுரி நகராட்சி மட்டும் நெசவாளர்களிடம் தொழிற்சாலை வரியை நிர்ணயிப்பது ஏற்புடையது அல்ல உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் அருகே சுமார் 100க்கும் மேற்பட்டோர் விசைத்தறி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சி நிர்வாகம் தொழிற்சாலை வரியை மாற்றி குடிசைத் தொழில் வரியாகவே அறிவிக்கவில்லையெனில் மாவட்டம் முழுவதும் உள்ள விசைத்தறி தொழிலாளர்களை ஒன்றிணைத்து நகராட்சி அலுவலகம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்தனர்.



