கிருஷ்ணகிரி, மே 30 –
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை ஒட்டி கிருஷ்ணகிரி பல் மருத்துவர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே துவங்கிய விழிப்புணர்வு பேரணிக்கு இந்திய பல் மருத்துவர்கள் சங்க கிருஷ்ணகிரி கிளை தலைவர் மருத்துவர் பிரபு தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.
அப்போது புகை என்னும் சிகரெட், பீடி குடிப்பதன் மூலமாகவும், புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதன் மூலமாக, மனிதர்களுக்கு ஏற்படும் கேன்சர் நோய் குறித்தும், இதனால் மனிதர்களின் உடல்நிலை பாதிப்பு குறித்தும், சிறப்புரையாற்றினார்.
கிருஷ்ணகிரி பல் மருத்துவர் சங்க செயலாளர் டாக்டர் நிவாஸ். சி டி எச் கன்வேயர் டாக்டர் ஆயிஷா பிரதோஷ், மருத்துவர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை கிருஷ்ணகிரி பல் மருத்துவர் சங்க தலைவர் பிரபு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் ஜெய் மாருதி நர்சிங் காலேஜ் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று கையில் விழிப்புணர்வு பதாகை ஏந்தி புகையினால் உண்டாகும் நோய்களை குறித்து கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்றனர். கிருஷ்ணகிரி பெங்களூர் சாலை வழியாக பழைய வீட்டு வசதி வாரிய பகுதி, லண்டன் பேட்டை, வழியாக சென்று புனித பாத்திமா மேல்நிலைப்பள்ளி இணைப்பு சாலை பகுதியில் முடிவடைந்தது.
இந்த விழிப்புணர்வு பேரணிக்கான ஏற்பாடுகளை ஜெய் மாருதி இன்ஸ்டியூட் ஆப் காலேஜ் தாளாளர் முத்துக்குமார், கல்லூரியின் முதல்வர் மகேஸ்வரி மற்றும் 25க்கும் மேற்பட்ட பல் மருத்துவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். விழிப்புணர்வு பேரணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி நகர காவல் துறையினர் செய்திருந்தனர்.



