நாகர்கோவில், செப். 3:
கன்னியாகுமரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான ‘சூப்பர் எல்-நினோ’ தாக்கம் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நாகர்கோவில் பொறியியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார்.
காலநிலை மாற்றம் மற்றும் எல்-நினோ போன்ற நிகழ்வுகளால் மழைப்பொழிவு மாறுபாடு, வெப்பநிலை உயர்வு, கடல் சீற்றம், கடல் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், அவற்றை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு விளக்கப்பட்டது. விவசாயிகள் பயிர் பாதுகாப்பு, நீர் மேலாண்மை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மீனவர்கள் பலத்த காற்று, கடல் சீற்றம் மற்றும் மோசமான வானிலை நிலவரங்களின்போது பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.
பேரிடர் பாதிப்புகளை குறைக்கும் வகையில் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் முன்னோடி மாவட்டமாக கன்னியாகுமரியை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வேலுமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எஸ்.காளீஸ்வரி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்வேல் முருகன், விவசாயிகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



