கன்னியாகுமரி, ஜூலை 7 –
விளையாட்டு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கார்கில் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 4 ஆயிரத்து 200 கி.மீட்டர் தூரத்தை 67 நாளில் கடந்து கல்லூரி மாணவர் சாதனை படைத்தார்.
இந்தூரை சேர்ந்தவர் கார்த்திக் ஜோஷி (24). பயோ மெக்கானிக் இன்ஜினியரிங் பாட பிரிவில் முதலாண்டு கல்லூரியில் சேர்ந்துள்ளார். இந்தியாவில் வளர்ந்து வரும் அல்ட்ரா எண்டூரன்ஸ் விளையாட்டு வீரரான இவர் கார்கிலில் இருந்து நீண்ட தூர ஓட்டத்தை தொடங்கினார். பல்வேறு மாநிலங்கள் வழியாக சுமார் 4 ஆயிரத்து 200 கி.மீட்டர் தூரத்தை கடந்து இன்று பிற்பகல் 3 மணியளவில் கன்னியாகுமரியில் தனது ஒட்டத்தை நிறைவு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த மே 2 ம் தேதி ஒட்டத்தை துவங்கி ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் ஹரியானா டெல்லி,ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 7 மாநிலங்கள் வழியாக 4 ஆயிரத்து 200 கி.மீட்டர் தூரத்தை கடந்துள்ளேன், உலகின் மிக பிரபலமான தென்ஆப்பிரிக்கா ஹாம்ரேட்ஸ் மாரத்தான் போட்டியில் பங்கேற்றுள்ளேன். சேலம் முதல் கன்னியாகுமரி வரை எந்த ஒய்வும் இல்லாமல் 414 கி.மீட்டர் தூரத்தை 72 மணி நேரத்தில் கடந்தேன். ஜம்முவில் மைனஸ் டிகிரி காலநிலையையும் ராஜஸ்தானில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும் சந்தித்தேன்.
இன்றைய இளைஞர்கள் முயற்சி செய்ய வேண்டும். பின்வாங்க கூடாது. போதை பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விடுபட வேண்டும். அடுத்த இரண்டு ஆண்டில் இலங்கை முழுவதும் ஓடுகிறேன். பின்னர் இலங்கையில் இருந்து நீச்சல் மூலம் இந்தியா வந்தடைந்து, பின்னர் இந்தியா முழுவதும் ஓடுவதற்கு திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.



