கன்னியாகுமரி, ஜூன் 12 –
கன்னியாகுமரி நகராட்சி கூட்டம் இன்று நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி கூட்டத்தில் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கன்னியாகுமரி நகராட்சி பகுதியில் வழங்கி வரும் புதிய குடிநீர் இணைப்பிற்கான சென்டேஜ் கட்டணத்தை 5 சதவீதம் உயர்த்தியும், 18 வார்டுகளிலும் குடிநீர் விநியோகம் செய்யும் பிரதான குழாய் மற்றும் விநியோக குழாயில் ஏற்படும் பழுதுகளை சீரமைக்க 5 லட்சம் ரூபாய் பொது நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யவும், நகராட்சியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்ய குடிநீரில் குளோரின் சீராக சென்றடைய இயந்திரம் மூலம் கலக்குவதற்கு 22 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் பொது நிதிலிருந்து அனுமதித்தும், அனைத்து வாடுகளிலும் தெருவிளக்கு பராமரிக்க 5 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்தும், திரிவேணி சங்கமம் பகுதியில் உள்ள ஹைமாஸ் விளக்கை சீரமைக்க 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அனுமதித்தும், குடிநீர் விநியோகம் செய்யும் திறந்தவெளி பொதுக்கிணறுகளின் மேல்மூடி அமைக்க 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தும், மேலும் கழிவுநீர் ஒடை, அலங்கார தரை தளம், புதிய குடிநீர் குழாய் பதித்தல், காங்கிரீட் தளம் மழைநீர் ஒடை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சுமார் 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் முருகன், சுகாதார ஆய்வாளர் அந்தோணி, மேற்பார்வையாளர் பிரதீஷ், வருவாய் ஆய்வாளர் முகமது யூசுப், கள ஆய்வாளர் கார்த்திகேயன், நகராட்சி கவுன்சிலர்கள் சுபாஷ், மகேஷ், சுஜா, லிங்கேஸ்வரி, நித்யா, மெர்லின், சிவ சுடலைமணி, இக்பால், சகாயசர்ஜினாள், டெல்பின் ஜேக்கப், ஆனிரோஸ், ஆட்லின், பூலோகராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.



