கன்னியாகுமரி, ஆக. 28:
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுதியில் உள்ள ஆக்கர் கடைக்குள் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பதுங்கியிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொட்டாரம் காலேஜ் சாலையில் செல்வகுமார் நடத்தி வரும் ஆக்கர் கடையில் நேற்று காலை மலைப்பாம்பு பதுங்கியிருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். இதுகுறித்து பேரூராட்சி கவுன்சிலர் வசந்தகுமாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக பூதப்பாண்டி வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், கடைக்குள் பதுங்கியிருந்த மலைப்பாம்பை பத்திரமாக பிடித்தனர். பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



