கன்னியாகுமரி, ஆக. 29:
திருவோணம் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குறிப்பாக கேரளாவில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததுடன், வடமாநில தொழிலாளர்களும் கன்னியாகுமரியில் திரண்டனர்.
காலையில் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகள், பின்னர் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கன்னியாகுமரியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான விவேகானந்த கேந்திரம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடற்கரைச் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசார், கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் மற்றும் சுற்றுலா பாதுகாவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் வருகையால் உள்ளூர் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.



