தென்காசி, நவம்பர் 3 –
தென்காசி மாவட்டத்தில் உள்ள பொது மக்களையும் கட்டிடம் சம்பந்தமான தொழில் மற்றும் நிறுவனங்களை நடத்தி வரும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களை இணைக்கும் வகையில் TN CONHUB என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியினை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தொடங்கி வைத்தார்.
குறிப்பாக மொபைல் செயலியாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலி மூலம் புதிதாக வீடு கட்ட விரும்புவர்கள் மற்றும் வீடு கட்ட தேவையான பொருட்களை எளிதாக வாங்கவும் கட்டுமான எஞ்சினியர்கள் தொடர்பான தொடர்புகளை பெறவும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக வாடகைக்கு வீடு தேடுபவர்களும் வீட்டை வாடகைக்கு விடுபவர்கள் நிலம் வாங்குபவர்கள் விற்பவர்கள் என பல்வேறு தரப்பினரும் பயனடையும் வகையில் இந்த செயலியானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த செயலின் மூலம் இருந்த இடத்திலிருந்தே கட்டிடம் சம்பந்தமான அனைத்து வசதிகளையும் வீட்டிலிருந்து செயலி மூலம் பெறும் வகையில் இந்த செயலியானது வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் குறைந்த விலையில் எந்த விதமான இடர்பாடுகளும் இன்றி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை அதுவும் குறிப்பாக தாங்கள் விரும்பும் கம்பெனி பொருட்களை இந்த செயலின் மூலம் ஆர்டர் செய்து எந்தவித அலைச்சல் பயணமும் இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் பேசுகையில் வருங்காலங்கள் டிஜிட்டல் மையமாக மாறிவரும் சூழலில் இது போன்ற செயல்கள் மூலம் பொதுமக்கள் மிகுந்த பயனடைவார்கள். அதே போல் வியாபாரிகளும் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இது போன்ற செயலி முதன் முறையாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தி அதிலும் குறிப்பாக தென்காசியில் எனது கையால் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் இது போன்ற தொழில்நுட்ப சாதனங்களை மக்கள் அதிகம் பயன்படுத்தி தங்களது பொருளாதாரத்தையும் நேரத்தையும் கட்டுப்படுத்தலாம் எனக் கூறினார். இந்நிகழ்ச்சியில் TN CONHUB இயக்குனர்கள் கணேஷ்குமார், நாகராஜன் மற்றும் நண்பர்கள் குடும்பத்தினர் தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



