நாகர்கோவில், ஜூன் 25 –
ஒடிசா மாநிலம் மாலன்கிரி பகுதி சேர்ந்தவர் சுபாஷ் பிரசாத் பாட்டில். அந்தப் பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவரது பக்கத்து வீட்டில் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த ஜான்பால் (21), அர்ச்சனா (39) ஆகியோர் வாடகைக்கு குடியேறினர். தங்களை கணவன் மனைவி போல் காட்டிக்கொண்ட இருவரும் சுபாஷ் பிரசாத் பாட்டிலுடன் நல்ல நட்புடன் பழகி வந்தனர். இதனால் 2 பேரும் அடிக்கடி நகைக்கடைக்காரரின் வீட்டுக்கு சென்று வந்தனர்.
சம்பவத்தன்று லட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சுபாஷ் பிரசாத் பாட்டில் வீட்டில் இருந்த 700 கிராம் தங்கம் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளை அடித்து விட்டு ஜாண்பால், அர்ச்சனா தப்பித்தனர். இந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இது குறித்து ஒடிசா போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய இருவரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் போலீசார் விசாரணையில் ஜான்பால், அர்ச்சனா ஆகியோர் கணவன் மனைவி இல்லை எனவும், கள்ள காதலர்கள் என்பதும் தெரிந்தது. மேலும் அவர்கள் ஒவ்வொரு மாநிலமாக சென்று வாடகைக்கு குடியேறி, இனிப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகை பணத்தை கொள்ளை அடிப்பது தெரிய வந்தது. இவ்வாறு கிடைத்த பணத்தை ஆந்திர மாநிலம் குண்டூரில் நிலம் மற்றும் வீடுகள் வாங்கி சொகுசாக வாழ்ந்து வந்ததும் அம்பலமானது. எனினும் ஒவ்வொரு மாநிலமாக இவர்கள் மாறி மாறி செல்வதால் ஒடிசா போலீசாரால் கள்ளக்காதல் ஜோடியை நெருங்க முடியாமல் இருந்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு இருந்து கொண்டு ஆரல்வாய்மொழி நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை செய்து வருவது ஒடிசா போலீசாருக்கு தெரிய வந்தது. இதை அடுத்து 5 ஆண் மற்றும் ஒரு பெண் என 6 ஒடிசா மாநில போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் வந்தனர். பின்னர் ஒரு வீட்டில் தங்கி இருந்து 2 பேரையும் கண்காணித்து வந்தனர்.
நேற்று ஆரல்வாய்மொழியில் உள்ள ஓட்டலுக்கு சென்று அங்கு வேலையில் இருந்த ஜான் பால் மற்றும் அர்ச்சனாவை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் 2 பேரையும் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தியதில் ஒடிசா மாநிலத்தில் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர்.
பின்னர் ஒடிசா போலீசார் ஆரல்வாய்மொழி போலீசார் மூலம் 2 பேரையும் பூதப்பாண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரையும் பின்னர் இருவரையும் கோர்ட் உத்தரவின் பேரில் ஆந்திர மாநிலத்திற்கு அழைத்து சென்றனர்.


