மார்த்தாண்டம், ஜூன் 18 –
குலசேகரம் அருகே உண்ணியூர் கோணம் பகுதியை சேர்ந்தவர் ஜீவன் (38). இவர் அருமனை கிளாத்தூர் என்ற பகுதியில் உள்ள பிரதான சாலையின் நடுவே காரை நிறுத்திவிட்டு பக்க விளக்குகளை எரியவிட்டபடி காரின் உள்ளே தூங்கியுள்ளார். நீண்ட நேரமாக கார் அங்கிருந்து எடுக்காததால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடையாலுமூடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து காரின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது காருக்குள் ஜீவன் அயர்ந்த நிலையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
உடனே போலீசார் அவரை தட்டி எழுப்பினர். அப்போது அவர் போதையில் இருந்த தெரிய வந்தது. மேலும் காருக்குள் மது பாட்டில்களும் கிடந்தது. உடனே காரை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் ஜீவன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.



