சிவகங்கை, ஆக. 19 –
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு சாலைப் பணியாளர் சங்கத்தினர் அரக்க தோற்றத்துடன் கூடிய முகமூடி அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர் இரா. மாரி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
சாலைப் பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நீதிமன்ற தீர்ப்பின்படி அரசு நிறைவேற்ற வேண்டும். இதற்கு மாறாக போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதும், அடக்கு முறையை கையாள்வது போன்ற விரோதப் போக்குகளை அரசு கைவிட வேண்டும். நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தொழிற்சங்க விரோதப் போக்கையும், அதிகார துஷ்பிரயோகம் செய்வதையும் கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைப்பின் மாநில பொருளாளர் தமிழ் ஆகியோர் பேசியதைத் தொடர்ந்து சின்னப்பன், கணேசன், பாண்டி, சுதந்திரமணி, பாலசுப்பிரமணியன், வீரய்யா, ராஜா மற்றும் துறைவாரியான தொழிற்சங்க நிர்வாகிகள் கண்டன உரை நிகழ்த்தினார்கள். முடிவில் மாவட்ட பொருளாளர் சதுரகிரி நன்றி கூறினார்.



